புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வான சந்திர பிரியங்கா புதுச்சேரி போக்குவரத்து,ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.இந்நிலையில் சாதி மற்றும் பாலினரீதியில் தாக்கப்படுவதாக கூறி கடந்த திங்கள் அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மேலும் காரைக்காலில் அவருடைய ஆதரவாளர்கள் உண்ணாவிரம் மற்றும் தலித் அமைப்புகளின் போராட்டம் என தீவிரம் அடைந்து வருகிறது.இதனிடையே அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை.அதன் காரணமாகவே அமைச்சர் பதவியிலிருந்து சந்திர பிரியங்கா,முதல்வரால் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்று கருத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சந்திர பிரியங்கா அமைச்சராக இருந்தபோது அவரது அலுவல் சார்ந்த செய்திகள் அனைத்தும், ’போக்குவரத்துத்துறை அமைச்சர்' என்ற வாட்ஸ்அப் குழு மூலமாகவே செய்தியாளர்களுக்கு அதிகாரபூர்வமாகப் பகிரப்பட்டது.அந்தக் குழுவில் ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எதிர்வினையாற்றி சந்திர பிரியங்காவின் அட்மின் போட்டிருக்கும் பதிவு தற்போது சமூக வாய்த்தலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்திர பிரியங்காவின் வாட்ஸ்அப் குழு அட்மின் பதிவிட்டிருக்கும் பதிவு பின்வருமாறு :-
ஒரு வாரத்துக்கு முன்பு கோயம்புத்தூரில் நடைபெற்ற ஜி20 | ஒய் 20 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நீங்கள்,`தான் வகிக்கும் துறைகளில் மிகச்சிறப்பாகச் செயலாற்றுகிறார்’ என்று புதுவை மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களை மனதார பாராட்டினீர்கள். அவரைச் சகோதரியாக பாவித்துப் பேசிய நீங்கள், அவர்களுக்கே தெரியாமல் அவர்களை நீக்குவதற்கான கோப்புகளில் கையெழுத்து போட்டுவிட்டு, அவசரமாக வெளியூர் பயணம் சென்றுவிட்டீர்கள். பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிய நீங்கள், ’அமைச்சர் சரியாகச் செயல்படவில்லை என்று ஆறு மாதங்களுக்கு முன்பே முதல்வர் என்னிடம் தெரிவித்தார். அப்போது நான் அதை ஏற்கவில்லை
மீண்டும் முதல்வர் சொன்னபோது ஏற்றுக்கொண்டேன்’ என்று, ஆளுநர் என்பதை மறந்து ஓர் அரசியல்வாதியைப்போல பேட்டி அளித்திருக்கிறீர்கள்.சகோதரி சந்திர பிரியங்கா என்னை அடிக்கடி சந்திப்பார்' என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த மேடையில் கூறிய நீங்கள், `மற்ற அமைச்சர்களைப்போல அவர் என்னை அதிகமாகச் சந்தித்ததில்லை' என்று பொய் சொல்வது, விந்தையாக இருக்கிறது.மேலும், உங்களுக்கு இவ்வளவு ஞாபகமறதி என்பதே, எங்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது.
இது மிகவும் எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. `புதுச்சேரியில் எந்தக் கோப்பை அனுப்பினாலும் திருப்பி அனுப்புகின்றனர். காலதாமதம் ஆகிறது. என்னால் சரியாகச் செயல்பட முடியவில்லை’ என மாண்புமிகு முதல்வர், செய்தியாளர்கள் முன்பே ஒப்புக்கொண்ட நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சரை மட்டும் பணிநீக்கம் செய்தது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஒரு பெண் என்பதாலா... இல்லை ஒரு தலித் பெண் என்பதாலா... இல்லை, வசதி படைத்தவரில்லை... அவரைக் கேட்க யாரும் நாதியில்லை என நினைத்தா?
புதுவை முதல்வர் ரங்கசாமி ஐயா, நீங்கள் அரசு முறைப் பயணமாக காரைக்கால் வந்தபோதெல்லாம், தன்னுடைய தந்தையைப்போல பாவித்து மிக பிரமாண்ட வரவேற்பு அளித்து அழகு பார்த்தவர் எங்கள் அமைச்சர். அவரைப் பதவியிலிருந்து விலக்க உங்களுக்கு நெருக்கடி அளித்தவர்கள் யார்... அவர்களைவிட எந்தவிதத்தில் நாங்கள் செயல்பாட்டில் குறைந்துவிட்டோம்?
தற்போது எங்கள் அமைச்சருக்கு எதிராக ஆட்சியாளர்கள் அனைவரும் பேசி வருவது எதனால்... அதை நீங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எங்கள் அமைச்சருக்கே மீண்டும் அமைச்சர் பதவியை வழங்கி, புதுச்சேரி மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வழிவகை செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். `புதுவை அமைச்சரவையில் தற்போது மாற்றம் இல்லை. தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக சந்திர பிரியங்கா அவர்களே நீடிப்பார்' என்ற செய்திக்காகக் காத்திருக்கிறோம் முதல்வர் அவர்களே” என்று அட்மின் போட்டிருக்கும் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பதிவு தற்போது சமூகஅ வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு புதுச்சேரி அரசியல் வாட்டாரகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.