அதிசயப் பிறவியாய் அவதரித்த என்.ஆர்.!
புதுச்சேரியில் 2001-இல் ப.சண்முகம் முதல்வர் பதவியை விட்டு விலகினார். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நீடிக்க முதல்வர் பதவிக்கு காங்கிரஸிடம் சண்முகத்தின் பரிந்துரையால் என்.ரங்கசாமி முதல்வராக்கப்பட்டார்.
வழக்கறிஞரான ரங்கசாமி எளிமை, கனிவு, பரிவு, அன்பானஅணுகுமுறையால் 'புதுச்சேரியின் காமராஜர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். காங்கிரஸ் தொண்டர்களால் என்.ஆர். என்று அன்பாக அழைக்கப்பட்ட ரங்கசாமி அமுல்படுத்திய நலத் திட்ட உதவிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் பிரபலமாயின.
மருத்துவம், பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரங்கசாமி அரசே ஏற்றது. அரசு பள்ளிகளில் ரங்கசாமியின் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இலவச புத்தகம், இலவச சைக்கிள், இலவச காலணி, இலவச சீருடை போன்றவை ஏழை, நடுத்தர மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
முதல்வர் ரங்கசாமியின் இந்த தொலைநோக்குத் திட்டத்தால் இடையில் கல்வியை நிறுத்திய மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். வெறும் ரூ.1 ரூபாய் கட்டணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதியைப் பெற்றனர்.
புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி வழங்கிய இலவச கிரைண்டர், மிக்சி திட்டம் இல்லத்தரசிகள் நடுவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசு காலி இடங்களில் புதிய பணி நியமனம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நிலுவைப் படிகள் அளிப்பு, பணி நிரந்தரம்ஆகியவற்றால் அரசு ஊழியர்கள் பலன் பெற்றனர்.
கூட்டுறவு நிறுவனங்கள், அரசு சார் நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, பேட்கோ, பாண்லே, கான்பெட் முதலானவற்றுக்கு, ரங்கசாமி தாராள நிதி வழங்கினார். மூடப்படும் நிலையில் இருந்த பாரதிமில், ஏ.எப்.டி மில், அரியூர் சர்க்கரை ஆலை, ஓடுதுறை ஜெயப்ரகாஷ் நாராயணன் கூட்டுறவு ஸ்பின்னிங் மில் ஆகியவற்றை நிதி வழங்கி இயங்க வைத்தார்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உற்பத்தி நெல்லுக்கு நல்ல விலை, வெள்ள மானியம், வறட்சி மானியம் வழங்கினார். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். மேலும் முதன்முறையாக புதுச்சேரி மாநிலத்தில் பணப்பயிர் சாகுபடி, மாடித் தோட்டம் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் கனிகளை உடனுக்குடன் விற்பனை செய்ய, வாரச் சந்தையை துவங்கியதும் ரங்கசாமி ஆட்சியின் ஒரு நட்சத்திர புரட்சியாகும்.
ரங்கசாமியின் மக்கள் நலத்திட்டங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்தன.
ஆனால், புதுச்சேரி மக்கள் மத்தியில் ரங்கசாமிக்கு தனிப்பட்ட ஆதரவு பெருகியதை காங்கிரஸ் விரும்பவில்லை. குறிப்பாக அப்போது பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் அமைச்சராக இருந்த நாராயணசாமி அரசின் செயல்பாடுகள், திட்டங்களால் கட்சிக்கு மட்டுமே பெயர்,புகழ், பாராட்டு கிடைக்க வேண்டும் என ரங்கசாமி அரசை நிர்பந்தித்தார்.
ஆனால், புதுச்சேரியில் ரங்கசாமியின் அதிரடித் திட்டங்களால் மக்கள் மத்தியில் ரங்கசாமிக்கு தனி செல்வாக்கு தோன்றியது. மத்திய அரசின் நிதியை மக்கள் நலத்திட்டங்களாக மாற்றி, மக்கள் செல்வாக்குள்ள தலைவராக ரங்கசாமி மாறினார்.
இதனால், அப்போது மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுத்தார். அதற்கும் அயராமல் ரங்கசாமி மக்கள் நல திட்டங்களை வழங்கினார். ரங்கசாமியைக் கட்டுப்படுத்த முடியாத காங்கிரஸ் தொடந்து தந்த நெருக்கடியால் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
2011-இல் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை நிறுவி, ரோடியர் மில் திடலில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். மக்கள் ஆதரவுடன் மூன்றே மாதத்தில் மீண்டும் முதல்வர் ஆனார். தனக்கே உரித்தான பாணியில் நலத்திட்ட உதவிகளை ரங்கசாமி வழங்கினாலும், மத்தியில் அடுத்தடுத்து ஆட்சி செய்த காங்கிரஸ், பா.ஜ.க அரசுகள், புதுச்சேரி ரங்கசாமி அரசுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டின.
இலவச திட்டங்களால் பூரித்த புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமியால் தொடர்ந்து நலத் திட்டங்களை செய்ய முடியாமல் போனது. 2016 சட்டமன்ற தேர்தலில், ரங்கசாமியின் உறவினர் மற்றும் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த நமச்சிவாயத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
இதனால், என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ரங்கசாமி எதிர்க்கட்சி தலைவரானார். நாராயணசாமியின் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 'டிசைன் டிசைனாக குடைசல் தந்தார். புதுச்சேரி மக்களே நாராயணசாமி ஆட்சி நடத்தும் திறமையயை அறிந்தது கொள்ளட்டும் என்.ரங்கசாமி நாலரை வருடங்கள் அமைதி காத்தார்.
புதுச்சேரி மக்களின் வெறுப்பால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அகற்றப்பட்டது. மக்களின் பேராதரவுடன் மீண்டும் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது. மக்களின் நோக்கம், விருப்பங்களை அறிந்து நலத்திட்ட உதவிகளை ரங்கசாமி தொடர்கிறார்.
குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் உயர் கல்விக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற முதல்வர் என்.ரங்கசாமியின் ஒற்றை அறிவிப்பு அவரது இமேஜை மென்மேலும் உயர்த்தியுள்ளது.
புதுச்சேரியில் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் அசைக்க முடியாத சக்தியாக ரங்கசாமி உயர்ந்திருக்கிறார்.
-கட்டுரை:T.M.ஆதர்ஷ்.